திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் 1,300 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தபடி மலையேறிச் சென்ற சிறுமிக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஜூபேர் அகமது-அதியா பானு தம்பதியின் மகள் ஜி.ஹனா. இவர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், யோகாசனமும் பயின்று வருகிறார்.
இந்நிலையில், இச்சிறுமி திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி கோயிலில் இருந்து மலை உச்சியில் உள்ள
அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் 1,300 படிக்கட்டுகளிலும் யோகாசனம் செய்தபடி மலையேறினார்.
ஒவ்வொரு படிக்கட்டிலும் வெவ்வேறு வகையான யோகாசனங்களை செய்தபடி மலையேறிச் சென்றார். இதுகுறித்து சிறுமி ஹனா கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக நான் யோகாசனம் பயின்று வருகிறேன். இதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைத்தேன்.
அதன்படி, 1,300 படிக்கட்டுகளிலும் யோகாசனம் செய்தபடி மலை ஏறினேன். மலையேறும்போது விருச்சக சனா, கருடாசனா, பூரண தனுராசனா, சக்கராசனா, நின்ற பாத ஆசனா, வீராசனம், அர்த்த கோண ஆசனா, அர்த்த சலபாசனம் என பல்வேறு ஆசனங்களை செய்தேன்” என்றார்.
















