நிரந்தர நியமனம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7-வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரவுபகல் பாராது ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதியுடன் நாளைய தினத்துக்கு முன்பாக கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பாடசாலை அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு வழங்கப்படாவிட்டால் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலியுறுத்துகின்றனர்.
எவ்வாறாயினும் ஜனாதிபதியுடன் எதிர்வரும் 3 ஆம் திகதி கலந்துரையாடல் நடாத்தப்படும் என போராட்டக்களபகுதிக்கு சென்றிருந்த ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ள போதிலும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதவேளை,குறித்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) இரண்டாவது நாளாகவும் கலந்து கொண்டார்.
அவ்விடத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர், அக்குழுவினரின் சுகதுக்கங்களை விசாரித்ததுடன், பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்:
“எனதும், ஐக்கிய மக்கள் சக்தியினதும், ஐக்கிய மக்கள் கூட்டணியினதும், அதேபோன்று கட்சி பேதமின்றி அனைவரினதும் உச்சபட்ச ஆதரவை இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்காகவே நான் இன்றும் இங்கு வந்தேன். 5 முதல் 10 வருடங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணைய உரிமையில்லையா? ஏன் அவர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணையத் தடை விதிக்கப்பட்டுள்ளது? மிகவும் தெளிவான தீர்வொன்று உள்ளது. அரசாங்கத்திற்கும் இந்தத் தீர்வு தெரியும். ஆனால், தற்போதைக்கு அரசாங்கம் உறுதியளித்ததை நிறைவேற்றாமல் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. ஏன் இவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்கள்? அரசாங்கம் பொய் சொன்னதால்தானே… இந்த ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் எப்போதும் இவர்களுடன் இருப்போம்.”












