ரஷ்யா தனது ஊரைக் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தில், கணவரின் கல்லறையை கீவ் நகருக்கு மாற்றிய ஒரு பெண் சர்வதேச ஊடகங்களும் தற்போது பேசிவருகின்றன.
வித்தாலி (Vitaly) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு டான்பாஸ் பகுதியில் நடந்த போரில் கொல்லப்பட்டார்.
அவரது முதல் கல்லறை அவர்களின் சொந்த ஊரான ஸ்லோவியான்ஸ்கில் (Slovyansk) இருந்தது.
ஆனால், அதன் பின்னர் ரஷ்யப் படைகள் முன்னேறி வருவதால், அந்தப் பகுதி தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
அதனால், நடாலியா தனது கணவரின் உடலைத் தோண்டியெடுத்து, பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குக் கொண்டு வந்துள்ளார்.
“நாங்கள் அவரை ஸ்லோவியான்ஸ்கில் அடக்கம் செய்தபோது, சில பகுதிகள் மீட்கப்பட்டு வந்தன. போர் விரைவில் முடிந்துவிடும் என்று நாங்கள் நினைத்தோம்,” என்று ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற மறு அடக்கச் சடங்கிற்குப் பின்னர் நடாலியா விளக்குகிறார்.
“ஆனால் போர்க்களம் இப்போது எங்களை நெருங்கிக் கொண்டே இருக்கிறது.
வித்தாலியின் கல்லறை ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் சென்றுவிடுமோ என்று நான் பயந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
வித்தாலி ஒரு பீங்கான் கலைஞர். 2022-ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் போது, தனது நாட்டைப் பாதுகாக்க அவராகவே முன்வந்து ராணுவத்தில் சேர்ந்தார்.
“அவருக்கு விருப்பமில்லைதான், ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர் ஒரு தேசப்பக்தர்,” என்று கண்ணீருடன் கூறுகிறார் நடாலியா.
அவர் கருவுற்றிருந்த போதே வித்தாலி கொல்லப்பட்டார். தனது மகளைப் பார்க்கும் வாய்ப்பு வித்தாலிக்குக் கிடைக்கவே இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
வித்தாலி பிறந்து, போராடி மடிந்த மண்ணிலிருந்து அவரது உடலை மாற்றுவது என்பது மிகவும் வலிமிகுந்த முடிவாக இருந்தது.
“உணர்ச்சிப்பூர்வமாக இது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இது சரியான முடிவு,” என்று நடாலியா உறுதியாகக் கூறுகிறார். ”
அவரை அங்கேயே விட்டுவிட்டு வந்திருந்தால், அது இன்னும் அதிக வேதனையைத் தந்திருக்கும்.”
அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயன்று வரும் வேளையில், உக்ரைன் மக்கள் கற்பனை செய்ய முடியாத பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குறிப்பாக, கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தின் நிலை குறித்த பேச்சுவார்த்தைகள் மிகவும் சிக்கலானதாக உள்ளன.
ஸ்லோவியான்ஸ்க் உள்ளிட்ட அந்தப் பகுதியின் ஐந்தில் ஒரு பகுதியை உக்ரைன் இன்னும் தன் வசம் வைத்துள்ளது. ஆனால் ரஷ்யப் படைகள் மாதக்கணக்கில் அந்தப் பகுதியை நோக்கி முன்னேறத் துடிக்கின்றன.
“தெருக்களில் ட்ரோன்கள் (Drones) சுற்றுகின்றன, சிறிய பேருந்துகளைத் தாக்குகின்றன. நகர மையத்தில் குண்டுகள் விழுந்து பள்ளங்களை உருவாக்குகின்றன,” என்று ஸ்லோவியான்ஸ்க் நகரின் தற்போதைய நிலையை நடாலியா விவரிக்கிறார்.
”சில மாதங்களுக்கு முன்பு வாரத்திற்கு ஒருமுறை தாக்குதல் நடந்தது. இப்போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தாக்குதல் நடப்பதாகவும் இதனால் தான் இந்த முடிவை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.















