இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராகப் பதவியேற்றுள்ள ஷானன் கோவ்லின் தலைமையிலான தூதுக்குழுவினர், பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தைப் பிரதமர் இதன்போது பாராட்டினார்.
இலங்கையின் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவைப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தைக் குறைப்பதில் இத்தகைய நிறுவனங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்ட பிரதமர், ‘டித்வா’ புயல் அனர்த்தத்தின் போது வழங்கிய உதவிக்கு விசேட நன்றியைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள், புயலுக்குப் பின்னரான நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தனர்.
அத்துடன், இலங்கையின் கல்வித் துறையின் மேம்பாட்டிற்குத் தேவையான உதவிகளை வழங்கவும் தாம் தயாராக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

















