போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பிற்கான “முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று நுவரெலியா நகரில் நடைபெற்றது.
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரதான சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் ஊடாக, அந்த மக்களை இதிலிருந்து விடுவித்து, அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இதேவேளை இன்றைய நிகழ்வில் ஒரு அங்கமாக போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகளில் பங்களிப்பு வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, முன்னதாக “முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்பதற்காக நுவரெலியா நகருக்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்திருந்தார்.
ஜனாதிபதி இன்று காலை நானு ஓயா ரதல்ல குறுக்குவீதி பகுதியில் தோட்டத்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இதன்போது தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். நாளாந்த சம்பளத்தினை அதிகரித்தமைக்கு தொழிலாளர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

















