ஒரு நாடாக விரும்பும் மாற்றத்தை அடைவதற்கு, மேம்படுத்தப்பட்ட மனித வளம் அவசியம் என்றும்,
அதற்காக, குழந்தைகளுக்கு சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட கல்வி கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர், முதலாவதாக பெலியத்தவில் உள்ள ருஹுணு விஜயபா தேசிய பாடசாலை மற்றும் அதன் ஆரம்ப பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
2026ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பணிப்புத்தகங்கள், முக்கிய பாடத்திட்டம் மற்றும் வகுப்பறை நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டிருந்தது.
இதன் பின்னர், வீரகெட்டிய ராஜபக்ஷ ஆரம்ப பாடசாலைக்கு சென்ற பிரதமர், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் ஆண்டு வகுப்பறைகள் மற்றும் கற்பித்தல் முறைகளைக் கவனித்து, குழந்தைகளுடன் நட்புறவுடன் உரையாடினார்.
இதன் பின்னர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர் உயர்தர வகுப்புகளைப் பராமரிப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம்
செலுத்தியிருந்தார்.
மேலும் உயர்தரக் குழந்தைகளைப் பள்ளியில் தக்கவைத்துக்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பாடசாலை நிர்வாகம் சரியான திட்டத்தின் படி செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு செயற்படும் பட்சத்தில் முழுமையான எதிர்கால மறுசீரமைப்புப் பணிகளில் பெரிதும் பயனளிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.













