டெல்லியில் நேற்றிரவு (12) நடைபெற்ற ஐசிசி 2026 டி:20 உலக் கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் நமீபியாவை 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னர், இந்திய அணி குழு ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
தொடர்ச்சியான இரண்டாவது வெற்றிக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி பாகிஸ்தானிடமிருந்து முதலிடத்தை தட்டிப் பறித்தது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணியானது பந்துப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் மற்றும் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான அரைசதங்களால் 9 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களை எடுத்தது.
இஷான் கிஷான் 24 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.
அதேநேரம் ஹர்த்திக் பாண்டியா பாண்டியா 28 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு சிவம் துபேவுடன் (16 பந்துகளில் 23 ஓட்டங்கள்) 81 ஓட்ட கூட்டணியைப் பகிர்ந்து கொண்டார்.
இதேவேளை, இந்திய அணியானது இன்னிங்ஸின் இறுதி 11 பந்துகளில் நான்கு ஓட்டங்களுக்கு இரண்டு ரன் அவுட்கள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
18.1 ஓவர்களில் இந்தியா 205/4 என்று இருந்தது, அவர்கள் தங்கள் இன்னிங்ஸை 209/9 என்று முடித்தது.
முன்னதாக, ஏழாவது ஓவரில் இந்தியா 100 ஓட்டங்களை கடந்தது, ஆனால் இறுதியில் நான்கு ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தமை போட்டியின் விசேட அம்சமாகும்.
பந்து வீச்சில் நமீபியா அணித் தலைவர் கெர்ஹார்ட் எராஸ்மஸ் 4 ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 20 ஓட்டங்களை வழங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 18.2 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.
சில வீரர்கள் தொடக்கம் தந்தாலும், அவர்களால் பெரிய ஓட்ட இலக்கிற்கு சல்ல முடியவில்லை.
அதிகபட்சமாக லூரன் ஸ்டீன்காம்ப் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி இரண்டு ஓவர்களில் 7 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவர் தவிர அக்ஸர் படேல் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.















