இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு காலமானார்.
அவர் தனது 101 வது வயதில் காலமானார்.
அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இதனை அறிவித்துள்ளது.
இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவுக்கு, கடந்த 01ஆம் திகதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பகல் 1.55 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
இதனிடையே, அவரின் விருப்பத்தின்படி மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு அவரின் உடல் தானம் அளிக்கப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 01.02.2026 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 24 தினங்களாக சிகிச்சையின்போது அவரது உடல் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தது.
பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர்.
இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.
அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக்குழுக்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நல்லகண்ணு மறைவிற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், மனித நேய கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு பிறந்தவர் நல்லகண்ணு. விடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்.
தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்தவர் என்பதுடன் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களின் விவரத்தை தொகுத்து நூலாக வெளியிட்டவர் நல்லகண்ணு என்பது குறிப்பிடத்தக்கது.














