அக்குரேகொட இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 02ஆவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை தொடர்ந்து 90 நாட்கள் வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றவிசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் 02ஆவது துப்பாக்கிதாரி மொனராகலை, நக்கல பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டார்.
பாழடைந்த வீட்டில் மறைந்திருந்த நிலையில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் மொனராகலை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி முன்னாள் கடற்படை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் முதலாவது சந்தேகநபர் அம்பலாங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தலங்கம அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக்க மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 13ஆம் திகதி கொலை செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் சில வழக்குகளுக்காக முன்நிலையாகியிருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.













