கிளாஸ்கோவில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ஓல்ட் ஃபர்ம்’ (Old Firm) கால்பந்து போட்டியின் முடிவில், செல்டிக் மற்றும் ரேஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் மைதான ஆக்கிரமிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்காட்டிஷ் கோப்பை காலிறுதிப் போட்டியில், பெனால்டி முறையில் செல்டிக் அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஐப்ராக்ஸ் (Ibrox) மைதானத்திற்குள் உற்சாக மிகுதியால் செல்டிக் ரசிகர்கள் அத்துமீறி நுழைந்தனர்.
பதிலுக்கு ரேஞ்சர்ஸ் ரசிகர்களும் மைதானத்திற்குள் புகுந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்தச் சம்பவத்தை “இழிவானது” என ஸ்காட்லாந்து பொலிஸார் வர்ணித்துள்ளனர்.
இந்த மோதலின் போது ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதோடு, பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸார் மற்றும் மைதான ஊழியர்கள் மீதும் வன்முறையைப் பிரயோகித்துள்ளனர்.
ரசிகர்கள் வீசிய பிளேர்ஸ் (Flares) எனப்படும் புகைப்பந்துகள் மற்றும் ஏனைய பொருட்களால் பொலிஸார் உட்படப் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாகப் பலர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வன்முறையில் ஈடுபடும் ரசிகர்களுக்குப் போட்டிகளைக் காண 10 ஆண்டுகள் வரை தடை விதிக்கும் (FBO) சட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் ஸ்காட்லாந்தின் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் சோபன் பிரவுன் (Siobhan Brown) தெரிவித்தார்.
2018-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக அதிக எண்ணிக்கையிலான செல்டிக் ரசிகர்கள் இந்த மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.
டிக்கெட் இல்லாமலும் பல ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்ததாகப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஸ்காட்டிஷ் கால்பந்து சங்கம் (SFA) உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














