லண்டனில் 1973 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஐ.ஆர்.ஏ (IRA) குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக, சின் பெயின் (Sinn Féin) கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ஆடம்ஸுக்கு (Gerry Adams) எதிராகத் தொடரப்பட்ட சிவில் வழக்கு இன்று (09) லண்டன் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
1973-இல் லண்டன் ஓல்ட் பெய்லி (Old Bailey) பகுதியிலும், 1996-இல் (London Docklands and Manchester Arndale) லண்டன் டாக்லண்ட்ஸ் மற்றும் மான்செஸ்டர் ஆர்ண்டேல் வணிக வளாகப் பகுதியிலும் ஐ.ஆர்.ஏ அமைப்பினால் நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மூவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்களுக்கான முடிவுகளை எடுத்ததில் ஜெர்ரி ஆடம்ஸுக்கு நேரடிப் பங்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தக் கோரியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட (John Clarke, Jonathan Ganesh and Barry Lacroix) ஜான் கிளார்க், ஜொனாதன் கணேஷ் மற்றும் பாரி லேக்ராக் ஆகியோர், இழப்பீடாக £1 (ஒரு பவுண்ட்) மட்டுமே கோரியுள்ளனர்.
தங்களுக்குப் பணத்தை விடவும், உண்மையை நிலைநாட்டுவதே (Vindicatory purposes) முக்கியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 77 வயதாகும் ஜெர்ரி ஆடம்ஸ், தாம் ஒருபோதும் ஐ.ஆர்.ஏ அமைப்பில் உறுப்பினராக இருந்ததில்லை என்றும், இந்தத் தாக்குதல்களில் தமக்கு நேரடி அல்லது மறைமுகப் பங்கு எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன் அடுத்த வாரம் அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.














