மனித உரிமை அமைப்புகள், கால்பந்து சங்கங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் கோரிக்கைகளுக்குப் பின்னர், ஈரானிய பெண்கள் கால்பந்து அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு அவுஸ்திரேலியா திங்கள்கிழமை (09) அடைக்கலம் வழங்கியது.
ஈரானில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் பெண்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆசிய கிண்ணத்துக்காக ஈரானிய அணி அவுஸ்திரேலியாவில் தற்சமயம் உள்ளது.
மார்ச் 2 அன்று தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டமான அவர்களின் முதல் போட்டிக்கு முன்பு ஈரானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வீரர்கள் அமைதியாக நின்றதால் ஈரானிய கடும்போக்காளர்களின் கோபத்திற்கு ஆளானார்கள்.
இது ஈரானில் விமர்சனங்களைத் தூண்டியது, ஒரு பழமைவாத வர்ணனையாளர் அந்த அணியை துரோகிகள் என்று குற்றம் சாட்டி கடுமையான தண்டனைக்கு அழுத்தம் கொடுத்தார்.
இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் அச்சத்தை எழுப்பினர்.
இதையடுத்து ட்ரம்பின் அழுத்தத்திற்கு பின்னர், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பின்னர் ஐந்து வீரர்களுக்கும் மனிதாபிமான விசாக்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
அவுஸ்திரேலியாவின் மனிதாபிமான விசா திட்டம் அகதிகள் மற்றும் மனிதாபிமானம் தேவைப்படும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பை வழங்குகிறது.
விசா வைத்திருப்பவர்கள் நாட்டில் வாழலாம், வேலை செய்யலாம் மற்றும் படிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.













