செல்லப்பிராணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘பிளே’ (Flea) எனப்படும் உண்ணி ஒழிப்புச் சிகிச்சைகளில் உள்ள நச்சு இரசாயனங்கள், வேல்ஸ் (Wales) பிராந்திய ஆறுகளில் ஆபத்தான அளவில் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் நீர் ஆராய்ச்சி நிறுவனம் (Cardiff University’s Water Research Institute) மேற்கொண்ட மூன்று ஆண்டு கால ஆய்வில், வேல்ஸில் உள்ள 9 ஆறுகளின் 62 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதில் முக்கால்வாசி ஆறுகளில் இமிடா குளோப்ரிட் (Imidacloprid) மற்றும் பிப்ரோனில் (Fipronil) ஆகிய நச்சுப் பூச்சிக்கொல்லிகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக நகர்ப்புற ஆறுகளில் இவை பாதுகாப்பான அளவை விட 45 மடங்கு அதிகமாக உள்ளன.
நாய்கள் மற்றும் பூனைகளின் கழுத்துப் பகுதியில் திரவமாகத் தடவப்படும் ‘ஸ்பாட்-ஆன்’ (Spot-on) சிகிச்சைகளே இதற்கு முக்கிய காரணம்.
பொதுவாக செல்லப்பிராணிகள் ஆறுகளில் நீராடுவதால் மட்டுமே இது பரவுவதாகக் கருதப்பட்டது.
ஆனால், இந்த ஆய்வின் மூலம் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி,
செல்லப்பிராணிகளின் படுக்கைகளைத் துவைக்கும்போது, மருந்து தடவிய செல்லப்பிராணிகளை வீட்டில் குளிப்பாட்டும்போது, மருந்து தடவிய பின் உரிமையாளர்கள் கைகளைக் கழுவும்போது,
இவை கழிவுநீர் குழாய்கள் (Sewers) வழியாக ஆறுகளைச் சென்றடைகின்றன.
இந்த நச்சு இரசாயனங்கள் ஆறுகளில் உள்ள பூச்சியினங்களை பெருமளவில் அழித்து வருகின்றன.
மே-ஃபிளை (Mayfly) போன்ற பூச்சியினங்கள் 90% வரை குறைந்துள்ளதாக பேராசிரியர் ஸ்டீவ் ஓர்மெரோட் தெரிவித்துள்ளார்.
“இந்த பூச்சிகளே ஆற்றுச் சூழல் மண்டலத்தின் அடிப்படை, இவை அழியும் போது ஒட்டுமொத்த ஆற்று உயிர்ச்சங்கிலியும் நிலைகுலையும் என ஆய்வாளர் மோலி ஹாட்லி (Molly Hadley) எச்சரித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் விவசாயத்திற்கு இந்த இரசாயனங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், செல்லப்பிராணிகளுக்கான மருந்துகளில் இவை இன்னும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆய்வு குடிநீர் தரத்தைப் பாதிக்காது என ‘வெல்ஷ் வாட்டர்’ (Welsh Water) நிறுவனம் உறுதி அளித்திருந்தாலும், ஆறுகளின் பாதுகாப்பிற்காக கால்நடை மருத்துவர்கள் தற்போது மாற்றுச் சிகிச்சைகளை பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளனர்.

















