2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகள், அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவோ முன்னெடுக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் தமது ‘X’கணக்கில் இட்டுள்ள பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதாகக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
இருப்பினும், தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? விசாரணைகளின் நம்பகத்தன்மை பேணப்படுமா? என்ற பாரிய கேள்விகள் எழுகின்றன.
நியாயமான, வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு தான் ஒருபோதும் எதிராக இல்லை என்றும், அத்தகைய நம்பகமான விசாரணைக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்துக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, அவர் ஒரு கௌரவமான இராணுவ அதிகாரி எனச் சுட்டிக்காட்டினார்.
முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போரில் சுரேஷ் சலே முக்கிய பங்காற்றியுள்ளதோடு, தேசிய பாதுகாப்புக்காக அவர் ஆற்றிய சேவை பாராட்டுக்குரியது என நாமல் தெரிவித்தார்.
காலப்போக்கில் சுரேஷ் சலேவை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி, திட்டமிட்ட அரசியல் அழுத்தங்கள் மூலம் போலியான கதைகள் உருவாக்கப்பட்டன.
தாக்குதல் தொடர்பாகத் தமது கடமைகளைச் செய்யத் தவறிய நபர்கள் மீது இவ்வாறான தீவிர விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.












