மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனைப்பாலம் பகுதியில் நேற்று பிற்பகல் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
முழுநாடும் ஒன்றாக ஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் இன்று பிற்பகல் மண்முனைப்பாலத்திற்கு அருகில் உள்ள கன்னக்காடு பகுதியில் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு பறல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கசிப்பு காய்ச்சுவதற்கான சுமார் 720,000மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு பொலிஸாரினால் அழிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளையும் சோதனைகளையும் பொலிஸார் முன்னெடுத்துவரும் நிலையில் அண்மைக்காலமாக பல கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இப்பகுதியில் முற்றுகையிடப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.












