ஈரானின் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை மீண்டும் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டெல் அவிவிடம் கூறிய ஒரு நாள் கழித்து, வெள்ளிக்கிழமை (20) அன்று இஸ்ரேல் ஈரான் மீது புதிய தொடர் தாக்குதல்களைத் தொடுத்தது.
இந்தத் தாக்குதல்கள் ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போரைக் கடுமையாகத் தீவிரவப்படுத்தியுள்ளன.
அதேநேரம், உலகளாவிய சந்தைகளைக் நிலைகுலைத்துள்ள பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான ஈரானின் பல நாள் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தன.
தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளது.
மேலும், தாக்குதல் அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளதுடன் உலகப் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது.
உலகின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் ஐந்தில் ஒரு பங்கைப் பதப்படுத்தும் கட்டாரின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தியதால், வியாழக்கிழமையன்று எரிசக்தி விலைகள் உயர்ந்தன.
இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்யப் பல ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.
வளைகுடாவின் வெளியேறும் கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதைத் தவிர்ப்பதற்காக, சவுதி அரேபியா தனது சில ஏற்றுமதிகளைத் திசைதிருப்பி வந்த செங்கடலில் உள்ள முக்கிய துறைமுகமும் வியாழக்கிழமை தாக்கப்பட்டது.
எனினும், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகத்திற்கான பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு உதவுவதாக முன்னணி ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் முன்வந்ததாலும், எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா கோடிட்டுக் காட்டியதாலும், வெள்ளிக்கிழமையன்று எண்ணெய் விலைகள் சரிந்தன.
பிராந்திய எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு ஒரு பெரும் விலையைக் கோரும் ஈரானின் தொடர்ச்சியான திறனையும், வளைகுடாவின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் மூலோபாய எரிசக்தி வளங்களைப் பாதுகாப்பதில் வான் பாதுகாப்புகளின் வரம்புகளையும் அடிக்கோடிட்டுக் காட்டின.
எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, தனது முக்கிய வாக்காளர்களிடையே அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் அரசியல் ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள ட்ரம்ப், உலகின் எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுசெல்லும் பாதையான ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவுமாறு விடுத்த தனது கோரிக்கைகளுக்கு எச்சரிக்கையுடன் பதிலளித்த நட்பு நாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதலை மீண்டும் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு தளம் மீதான குண்டுவீச்சில் இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது என்றும், இதுபோன்ற தாக்குதல்களைத் தள்ளிப்போடுமாறு ட்ரம்ப் இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டார் என்றும் நெதன்யாகு பின்னர் உறுதிப்படுத்தினார்.
தீவிரமடையும் எரிசக்தி நெருக்கடி
மோதலுக்கு முடிவே தெரியாத நிலையில், உலகளாவிய எண்ணெய் நெருக்கடி அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், நீர்வழிப்பாதை வழியாகப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான உரிய முயற்சிகளுக்குப் பங்களிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன.
மேலும், “உற்பத்தியை அதிகரிப்பதற்காகக் குறிப்பிட்ட உற்பத்தி நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, எரிசக்தி சந்தைகளை நிலைப்படுத்த ஏனைய நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.
எனினும், உடனடி நடவடிக்கைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
நீர்வழிப்பாதையைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு பங்களிப்பும், போர்கள் முடிவடைந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என்று ஜெர்மனின் அரசு தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மீண்டும் வலியுறுத்தினார்.
போரின் ஒரு புதிய கட்டம்
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள், அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்திய “போரின் ஒரு புதிய கட்டத்திற்கு” வழிவகுத்துள்ளதாக ஈரான் இராணுவம் கூறியது.
ஈரானின் எரிசக்தி வசதிகள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடந்தால், உங்கள் மற்றும் உங்கள் பங்காளிகளின் எரிசக்தி உள்கட்டமைப்பு முற்றிலுமாக அழிக்கப்படும் வரை, அதன் மீதான தாக்குதல்கள் ஓயாது என்று ஈரான் இராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கூறியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
ஈரானியத் தாக்குதல்களால் ஆண்டுக்கு 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள கட்டாரின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறனில் ஆறில் ஒரு பங்கு செயலிழந்துள்ளதாகவும், அதைச் சரிசெய்ய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் கட்டர் எரிசக்தி தலைமை நிர்வாக அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் வசதிகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் சேதம் ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.














