ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஈராக் தலைநகரில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
ஈரான் போருடன் தொடர்புடைய மோதல்கள் பிராந்தியம் முழுவதும் பரவி, அமெரிக்க வசதிகள் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள சாத்தியமான இலக்குகளில் அமெரிக்கக் குடிமக்கள், அமெரிக்க நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தூதரக வசதிகள், எரிசக்தி உள்கட்டமைப்பு, ஹோட்டல்கள், விமான நிலையங்கள் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிற இடங்களும் அடங்கும்.
ஈராக்கில் அண்மையில் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பத்திரிகையாளரை ஷெல்லி கிட்டில்சன் என அமெரிக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், இந்தக் கடத்தல் தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற கட்டாயிப் ஹிஸ்புல்லா போராளிக் குழுவுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை ஈராக் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.













