இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவு மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்காக மக்கள் அதிகளவில் இணையதளங்களை பயன்படுத்துகின்றனர்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் மோசடிக்காரர்கள், தரவுகளைத் திருடி பணத்தை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, கவர்ச்சிகரமான புத்தாண்டு சலுகைகள் மற்றும் பரிசுகள் தொடர்பான போலி அறிவிப்புகள், போலியான வங்கி இணையதளங்கள் மற்றும் வங்கி செயலிகளைப் புதுப்பிக்குமாறு கோரும் செய்திகள், போலியான கியூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யத் தூண்டுதல், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் என்பன குறித்து அவதானமாக செயற்படவும்.
இவ்வாறான மோசடிகள் ஊடாக தனிப்பட்ட தரவுகளைப் பெற்று, வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை திருடும் அபாயம் உள்ளது.
எனவே, இணையதளம் ஊடாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போதும், அறிமுகமில்லாத இணைய இணைப்புகளை அழுத்தும் போதும் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.















