குறைந்த மாத தவணையில் மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள உதவும் “சமூக குத்தகை” திட்டத்தின் புதிய கட்டம் ஜூலை மாதம் 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர் Roland Lescure அறிவித்துள்ளார். “100 முதல் 200 யூரோக்கள் வரை மாத தவணையில் மின்சார வாகனங்களை பெறும் வாய்ப்பு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது” என அவர் தெரிவித்தார்.
மேலும், சாதாரணமாக வாகனம் வாங்க முடியாத பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தலா 50,000 வாகனங்களுக்காக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 112,000 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளதுடன், அது மொத்த வாகன விற்பனையின் 28 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு மொத்தமாக 327,000 மின்சார வாகனங்கள் விற்பனையானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு போர்நிலையால் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்கு மேலும் 50,000 குறைந்த வாடகை மின்சார வாகனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் Sébastien Lecornu ஏற்கனவே அறிவித்திருந்தார். இதேவேளை, தற்போதைய வாகன விற்பனை எண்ணிக்கைகள் “மிகச் சிறப்பானவை” என அமைச்சர் Roland Lescure பாராட்டியுள்ளார்.

















