காசா மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதலில் தனது இடது கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி ஒருவர் விசேட சிகிச்சைக்காக நேற்றைய (07) தினம் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளார்.
அதன்படி, மரியம் சப்பா எனும் குறித்த சிறுமி அவரது தாயார் பாத்திமா சல்மான் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்தார்.
விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்த போது, பரிசுகள், பலூன்கள் மற்றும் பூங்கொத்துகளை ஏந்திய ஒரு சிறிய கூட்டம் அவர்களை அன்புடன் வரவேற்றது.
மரியம் சப்பாவின் சிகிச்சைக்காக அவரது குடும்பம் முன்னதாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்ரம்ப் நிர்வாகம் அனைத்து பாலஸ்தீனியர்களுக்குமான வருகையாளர் விசாக்களை நிறுத்தியதிலிருந்து, அவர்கள் எகிப்தில் நிச்சயமற்ற நிலையில் சிக்கியிருந்தனர்.
இந்த நிலையில், காசாவில் இருந்து காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த சிறுவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்த வருகை அமைந்துள்ளது.
காசாவில் டெய்ர் அல்-பாலாவில் (Deir al-Balah) உள்ள ஒரு குடும்பத்தின் வீட்டை ஏவுகணை தாக்கியதில் கை துண்டிக்கப்பட்ட 10 வயது மரியம், காசாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளில் ஒருவர் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.
காசாவில் இல்லாத அவசர சிகிச்சை தேவைப்படும் 18,500 நோயாளிகள் இருப்பதாக அந்த சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.













