மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் புதிய திருப்பமாக, லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
வொஷிங்டனில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், Hezbollah அமைப்பை நிராயுதபாணியாக்குவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி உறவை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
எனினும், லெபனானில் போர்நிறுத்தம் அமுலில் இல்லை என்பதை நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எரிபொருள் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என எச்சரித்துள்ளார்.
லெபனான் மீதான தாக்குதல்களைக் குறைக்குமாறு தான் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், இஸ்ரேலின் தாக்குதல்களால் லெபனானில் மனிதாபிமான நெருக்கடி முற்றியுள்ளது. இதுவரை ஆயிரத்து 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, 12 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறிப்பாக, பெய்ரூட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகளை வெளியேற்றுமாறு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.












