யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது, சந்தா பணம் செலுத்துவது தொடர்பாக உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவை மிகவும் முறைப்படி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, கடந்த ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை புதிய உறுப்பினர்கள் இணைவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு, பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இந்த அறிவித்தலின் அடிப்படையில், 93 புதிய உறுப்பினர்கள் உரிய சந்தா பணத்தைச் செலுத்தி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மார்ச் 06-ஆம் திகதி நடைபெறும் என கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நிர்வாக தெரிவு குறித்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திலேயே, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொலைபேசி வாயிலாக மற்றுமொரு அறிவிப்பை வழங்கினார்.
சங்க யாப்பின்படி, புதிய உறுப்பினர்கள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரே நிர்வாக தெரிவு இடம்பெற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, மேலும் 42 பேர் புதிதாகச் சந்தா பணம் செலுத்தி சங்கத்தில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த போதிலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால் அவர்களை இணைக்க முடியாது என தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
முறையான அறிவித்தல் வழங்கப்பட்டு, உறுப்பினர்கள் இணைக்கப்பட்ட பின்னரும் நிர்வாக தெரிவைத் தாமதப்படுத்துவது சங்கத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
திட்டமிட்டபடி ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்ய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.














