சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் விசேட கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுப் பல குடும்பங்கள் சுற்றுலாச் செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும் போது, தாங்கள் இருக்கும் இடத்தைப் புகைப்படங்கள் அல்லது காணொளிகள் மூலம் உடனுக்குடன் (Live Updates) சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீங்கள் சுற்றுலாத் தலங்களில் இருக்கும் படங்களைப் பதிவிடுவதன் மூலம், “தற்போது வீட்டில் யாரும் இல்லை” என்ற தகவலை உலகிற்குப் பகிரங்கப்படுத்துகிறீர்கள்.
இது வீடுகளை உடைத்துத் திருடும் கும்பல்களுக்குச் சாதகமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, பாதுகாப்பு நலன் கருதி, உங்களது பயண அனுபவங்கள் மற்றும் புகைப்படங்களை, சுற்றுப்பயணம் முடிந்து பாதுகாப்பாக மீண்டும் வீடு திரும்பிய பின்னரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் போது வீட்டின் பாதுகாப்பு குறித்து அண்டை வீட்டாரிடம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரியப்படுத்துங்கள்.
புத்தாண்டு காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அதேவேளை, சொத்துக்களின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.













