உக்ரைன் போரில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய இராணுவ உதவியாக, 120,000 ட்ரோன்களை (Drones) வழங்கவுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் உக்ரைன் – ரஷ்யப் போரில், ட்ரோன்களின் ஆதிக்கம் இரு தரப்பிலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்குப் பெரும் வலுச் சேர்க்கும் வகையில், ஒரே கட்டத்தில் 1,20,000 ட்ரோன்களை வழங்கப் பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
இது போன்ற ஒரு பெரிய அளவிலான விநியோகம் இதுவரை இடம்பெற்றதில்லை எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெர்லினில் இன்று நடைபெற்ற ‘உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழு’ கூட்டத்திற்கு முன்னதாக, பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, “மத்திய கிழக்கில் (ஈரான் போர்) கவனம் திசை திரும்பியுள்ள நிலையில், உக்ரைனை தாம் மறந்துவிடுவோம் என விளாடிமிர் புடின் நினைக்கிறார் எனவும் ஆனால், உக்ரைனுக்குத் தேவையான அமைதி கிடைக்கும் வரை தாம் அவர்களுடன் உறுதியாக நிற்போம் எனவும் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த உதவித் திட்டத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ட்ரோன்கள், உளவு பார்க்கும் ட்ரோன்கள், தளவாடங்களைக் கொண்டு செல்லும் ட்ரோன்கள் மற்றும் கடல்சார் திறன்கொண்ட ட்ரோன்கள் எனப் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கியுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை பிரித்தானிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இதேவேளை, வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், உக்ரைனுக்கு மேலதிக ஆதரவை அறிவிக்கவுள்ளார்.
இதன்படி: 3.36 பில்லியன் பவுண்டுகள் கடனுதவியின் ஒரு பகுதியாக, 752 மில்லியன் பவுண்டுகள் உடனடி கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.
மேலும் “ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான இராணுவத் தளவாடங்களை வாங்க இந்த நிதி உதவும்,” என ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையாளர்கள் உக்ரைன் மீது கவனம் செலுத்த நேரமில்லாமல் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கவலை வெளியிட்டிருந்த நிலையில், பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு உக்ரைனுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
தரை மற்றும் வான்வழி ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்தி ரஷ்யாவின் ஒரு நிலையைத் தாம் முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளதாக செலென்ஸ்கி அண்மையில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.















