அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையிலான வார்த்தைப் போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் மீது மீண்டும் ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஈரான் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டைச் சாடியுள்ள ட்ரம்ப், “நாங்கள் கையாள்வது ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சிலை அல்ல” என அண்மையில் கிண்டல் செய்திருந்தார்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ‘சிறப்பு உறவில்’ (Special Relationship) மீண்டும் ஒரு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் போக்கு மிகவும் தர்மசங்கடமான ஒரு சூழலில் வெடித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முக்கிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக தற்போது வாஷிங்டன் சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில் ஏப்ரல் இறுதியில் மன்னர் சார்லஸ் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணம் நெருங்கி வரும் வேளையில், இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டக் குறைப்புபிரித்தானியப் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள், தற்போதைய பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் நிதி வெட்டுக்களை (Cuts) மேற்கொள்ள முயன்று வருவதாக நேற்றைய போட்காஸ்டில் வெளியான பிரத்தியேகத் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இராணுவத்திற்கான நிதியைக் குறைக்கும் இந்த முயற்சி, நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸுக்கு பெரும் அரசியல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
இதேவேளை, எரிசக்தி விலைக் கட்டுப்பாடு (Energy Price Cap) மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உதவக்கூடிய புதிய திட்டம் குறித்த ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஈரான் போரால் எரிசக்தி விலைகள் உயர்ந்து வரும் நிலையில், வர்த்தக நிலையங்களுக்கு இந்தத் திட்டம் ஒரு நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ட்ரம்ப் மற்றும் ஸ்டார்மர் இடையிலான இந்த மோதல், வரவிருக்கும் மன்னரின் பயணத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது இராஜதந்திர வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















