ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதால் ஈராக்கில் இருந்து சிரியா வழியாக மத்திய தரைக்கடலுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்காக, பழைய எண்ணெய் குழாய் வழியை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர ஈராக் மற்றும் சிரியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே போர் நடந்து வருவதால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகிற்கு தேவையான கச்சா எண்ணெயில், 20 சதவீதம் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தப் பாதையை ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருகிறது.
இதற்கு தீர்வாக, நீண்ட காலமாகச் செயல்படாமல் இருந்த ஈராக்-சிரியா வழியாக செல்லும் கச்சா எண்ணெய் குழாய்த்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தப் புனரமைப்புத் திட்டத்தை அமெரிக்க எரிசக்தி நிறுவனமான ‘செவ்ரான்’ முன்னெடுத்துள்ளது.
கடல் வழிப்பாதையை நம்பியிருக்காமல் நிலத்தின் வழியே குழாய்கள் அமைத்து எண்ணெயை கொண்டு செல்ல அமெரிக்க நிறுவனங்களும், ஈராக் அரசும் முடிவு செய்துள்ளன.
மேலும், சுகாதாரம், தகவல் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு உட்பட பல துறைகளிலும், 5.77 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை பாராட்டியதோடு, ஈராக்-சிரியா கச்சா எண்ணெய் குழாய் திட்டம் முக்கியமான ஒன்றாகும் என தெரிவித்துள்ளது.
ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது தலைமைத்துவத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ள சூழலில், எண்ணெய் குழாய் வழித் திட்டம் மீண்டும் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதால் ஈராக்- சிரியா வழியாக லாரிகள் மூலம் கச்சா எண்ணெயைக் கொண்டு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.














