உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் வரிசையில், ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியை முந்தி பிரான்ஸ் அணியின் முன்கள வீரர் கிலோயன் எம்பாப்பே முதலிடம் பிடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான விறுவிறுப்பான போட்டியில், இங்கிலாந்து அணியிடம் பிரான்ஸ் 6-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
எனினும், இப்போட்டியில் எம்பாப்பே அதிரடியாக 2 கோல்களை அடித்ததன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் தனது ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கையை 22 ஆக உயர்த்தி இந்த மைல்கல்லை எட்டினார்.
இதற்கு முன்னர் 21 கோல்களுடன் முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சியை (Lionel Messi), 27 வயதேயான எம்பாப்பே தற்போது பின் தள்ளியுள்ளார்.
மெஸ்சி இன்று நடைபெறவுள்ள ஸ்பெயின் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார்.
மெஸ்சிக்கு இதுவே கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக அமையலாம் எனக் கருதப்படும் நிலையில், எம்பாப்பே தனது வயதின் காரணமாக இன்னும் குறைந்தது ஒரு உலகக் கிண்ணத் தொடரிலாவது விளையாட வாய்ப்புள்ளது.
தற்போதைய உலகக் கிண்ணத் தொடரில் எம்பாப்பே மொத்தம் 10 கோல்களை அடித்து, தங்கக் காலணி (Golden Boot) விருதுக்கான பட்டியலில் மெஸ்சியை விட 2 கோல்கள் முன்னிலையில் முதலிடத்தில் உள்ளார்.
ரியல் மெட்ரிட் (Real Madrid) கழகத்தின் நட்சத்திர வீரரான எம்பாப்பே, தனது 22 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


















