பிரேசில் கால்பந்து உலகின் முடிசூடா மன்னனான பீலே (Pelé) கடந்த 1958ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் அணிந்து விளையாடிய டி-சேர்ட், நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 49 இலட்சம் அமெரிக்க டொலருக்கு (சுமார் 47.18 கோடி இலங்கை ரூபாய்) விற்பனையாகியுள்ளது.
கால்பந்து வீரர் ஒருவரின் டி-சேர்ட் ஏலம் போன வரிசையில், இது உலகளவில் இரண்டாவது அதிகபட்ச விலையாகப் பதிவாகி சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 2022ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் டீகோ மரடோனாவின் (Diego Maradona) டி-சேர்ட் 93 இலட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனதே உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 1958ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடிய பீலே, 2 அதிரடி கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பீலே அணிந்திருந்த டி-சேர்ட்டை, அவர் தனது நெருங்கிய நண்பரும் சக கால்பந்து வீரருமான ‘டிடா’ (Dida) என்பவருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். நீண்ட காலமாக டிடாவின் குடும்பத்தினரால் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் பிரேசில் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்ட இந்த டி-சேர்ட், தற்போது ‘சோத்பி’ (Sotheby’s) ஏல நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டு இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளது.















