புத்தாண்டு காலத்தில் மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் சுமார் 155,000 பயணிகள் தங்களின் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் நேற்று (19) வரை இந்த போக்குவரத்து மையம் மூலம் இத்தனை எண்ணிக்கையிலான பயணிகள் தங்களது போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாக மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தின் உதவி முகாமையாளர் நிமல் வெட்டசிங்க குறிப்பிட்டார்.
பயணிகளின் வசதிக்காக மக்கும்புர பயணிகள் முனையத்திலிருந்து 2,600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து கூட்டுத்தாபனம் மற்றும் மேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை கூட்டாக இந்தப் பேருந்துகளைப் பயணிகளின் வசதிக்காக ஈடுபடுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை நடைமுறையில் இருந்த கால அட்டவணைகளில் மாற்றங்கள் செய்து, கடந்த சில நாட்களாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், நாளை (21) முதல் வழக்கமான கால அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.













