இந்தியாவின் தேர்தல் முறையை “ஜனநாயகத்தின் திருவிழா” என்று உலக நாடுகளே போற்றி வருகின்றன.
அந்த வகையில், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவை நேரடியாகப் பார்வையிடச் சென்ற சர்வதேசப் பிரதிநிதிகள், நமது தேர்தல் மேலாண்மையைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ‘சர்வதேசத் தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின்’ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்திலுள்ள சிலிகுரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்றனர்.
அங்கு அதிகாலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு மற்றும் அதனைத் தொடர்ந்து தொடங்கிய உண்மையான வாக்குப்பதிவு ஆகிய இரண்டையும் அவர்கள் மிக அருகிலிருந்து கவனித்தனர்.
வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான ஏற்பாடுகளைக் கண்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக, வாக்குச்சாவடிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் ‘வெப்காஸ்டிங்’ வசதியை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகள் குடிநீர் வசதி, வெயிலைத் தவிர்க்க நிழற்குடை மற்றும் அமருவதற்கான இருக்கை வசதிகள் ஆகியவை அவர்களுக்குப் பெரும் வியப்பை அளித்தன.
தேர்தல் என்பது வெறும் அதிகார மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு கொண்டாட்டம் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த “திருவிழா போன்ற சூழலை” அவர்கள் கைதட்டிப் பாராட்டினர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் இவ்வளவு நேர்த்தியாகவும், அமைதியாகவும், தொழில்நுட்ப வசதிகளுடனும் நடப்பது சர்வதேச நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக வெளிநாட்டு பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது..
என்ன தான் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் களத்தில் சண்டை போட்டாலும், மக்களிடையே வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், தேர்தலில் வாக்களிப்பதன் மூலமே உண்மையான ஜனநாயகத்தை மலர வைக்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையமும் பல பிரச்சனைகள் மற்றும் சவால்களை கடந்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருக்கிறது.















