பிரித்தானியாவின் மில்டன் கெய்ன்ஸ் (Milton Keynes) பகுதியில் உள்ள புகழ்பெற்ற இரவு நேர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தை தொடர்ந்து ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Milton Keynes) மில்டன் கெய்ன்ஸ், (Fenny Stratford) ஃபென்னி ஸ்ட்ராட்போர்டில் உள்ள ‘பிங்க் பண்டர்ஸ்’ (Pink Punters) எனும் பிரபலமான இரவு நேர விடுதியில் நேற்று அதிகாலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக 51 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில் விடுதி வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிந்தபோது, திடீரெனத் தீப்பிடித்த நிலையில் வினாடிகளில் தீ பரவத் தொடங்கியதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதேவேளை, தீ விபத்தில் குறித்த கட்டடம் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்திய தேம்ஸ் வேலி பொலிஸார் (Thames Valley Police), பிறரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் தீ வைத்ததாக 51 வயதுடைய மில்டன் கெய்ன்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கான பின்னணி குறித்து எவ்விதமான ஊகங்களையும் பரப்ப வேண்டாம் எனப் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் உயிர்ச்சேதம் ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













