பிரித்தானியாவில் கொல்லப்பட்ட பதின்ம வயது சிறுமி பிரியானா கேயின் (Brianna Ghey) தாயார் எஸ்தர் கேய், சமூக வலைதளப் பாதுகாப்பு குறித்து பிரதமர் கீர் ஸ்டார்மர் எடுத்து வரும் அணுகுமுறை தொடர்பாகத் தனது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.
இணையப் பாதுகாப்பு (Online Safety) குறித்துப் பேசுவதற்கு, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்கு முன்னதாகவே பிரதமர் கீர் ஸ்டார்மர் சமூக வலைதள நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.
கூகுள் (Google), டிக்டாக் (TikTok) மற்றும் மெட்டா (Meta) ஆகிய நிறுவனங்களின் தலைவர்களைச் சமீபத்தில் சந்தித்த பிரதமர் ஸ்டார்மர், “பிரித்தானியக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எங்களுடன் இணைந்து சிறப்பாகச் செயல்படுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஏனைய 12 குடும்பங்களுடன் இணைந்து பிரதமருக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் எஸ்தர் கேய் தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வாரிங்டன் பூங்காவில் 16 வயது சிறுமி பிரியானா கேய், இரண்டு பதின்ம வயது சிறுவர்களால் கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளில் ஒருவன் இணையத்தில் கொலை மற்றும் சித்திரவதை தொடர்பான ‘இருண்ட காணொளிகளை’ (Dark materials) அதிகளவு பார்த்ததாக விசாரணைகளில் தெரியவந்தது.
இதன்பின்னர் , சிறுவர்களுக்கான சமூக வலைதள மற்றும் கைத்தொலைபேசி கட்டுப்பாடுகளை வலியுறுத்தி எஸ்தர் கேய் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் இலாபத்தை விடக் குழந்தைகளின் பாதுகாப்பே முக்கியம் என்பதை வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













