பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரும் மே 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) அறிவித்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது இருதரப்பு சட்டத்தரணிகளுக்கும் இடையே காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன:
யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ், “இந்த வழக்கின் முதலாவது ‘சதித்திட்டம்’ எனும் குற்றச்சாட்டில் தொடர்புடையவராகக் கருதப்பட்ட டெய்சி ஃபொரஸ்ட் தற்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனவே, எனது கட்சிக்காரருக்கு எதிராக அந்தச் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது,” என வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, “டெய்சி ஃபொரஸ்ட் அவரது மோசமான உடல்நிலை காரணமாகவே மனிதாபிமான அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இது பிரதிவாதி தரப்பு குறிப்பிடுவது போன்ற சட்ட ரீதியான விடுவிப்பு அல்ல,” எனச் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆரம்பகட்ட ஆட்சேபனை குறித்து சட்டமா அதிபரின் இறுதி நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திங்கட்கிழமை சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை முன்வைக்குமாறும், அது குறித்த பிரதிவாதி தரப்பின் பதிலை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த ஆட்சேபனைகள் மீதான இறுதி உத்தரவு மே 14ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.















