கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோ பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் திங்களன்று (18) இரண்டு பதின்வயது இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரைக் கொன்றனர்.
பின்னர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சில தெருக்கள் தள்ளிச் சென்று தங்களைத் தாங்களே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி காவல்துறை விசாரித்து வருகிறது.
வீட்டை விட்டு ஓடிச் சென்று, தற்கொலை செய்துகொள்ள வாய்ப்புள்ள ஒரு பதின்வயது இளைஞனைப் பற்றிய அழைப்பு குறித்து அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருந்தபோது, திங்கட்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
சான் டியாகோவின் இஸ்லாமிய மையத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டிடத்தின் முன்புறத்தில் சுடப்பட்ட நிலையில் மூன்று பேரை அவர்கள் கண்டறிந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அருகிலுள்ள ஒரு தோட்டக்காரர் மீது வாகனத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவர்களுக்கு மற்றொரு அழைப்பு வந்தது.
மசூதிக்கு அருகிலுள்ள ஒரு வாகனத்தில், 17 மற்றும் 18 வயதுடைய சந்தேக நபர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு இறந்த நிலையில் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சான் டியாகோ இஸ்லாமிய மையத்திற்கு எதிராக எந்தவொரு குறிப்பிட்ட அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை.
ஆனால் சந்தேக நபர்கள் “பொதுவான வெறுப்புப் பேச்சுகளில்” ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டறிந்ததாக சான் டியாகோ காவல்துறைத் தலைவர் ஸ்காட் வால் கூறினார்.
எனினும், அவர் மேலதிக விவரங்களைத் தர மறுத்துவிட்டார்.














