இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ளார்.
நேற்று இரவு (18) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய விமானப்படைத் தளபதி, மே 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கை விமானப்படை (SLAF) தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, விமானப்படைத் தலைமைத் தளபதி சிங் இன்று காலை (19) பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு வந்தடைந்ததும் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுக்கு இடையே உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இந்திய விமானப்படைத் தளபதி, இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சரையும் பாதுகாப்பு செயலாளரையும் சந்தித்தார் என்றும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பரஸ்பர நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













