ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரமும் உரிமைகளும் காக்கத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த கியூபாவின் தேசிய வீரர், கவிஞர் மற்றும் சிந்தனையாளர் José Martí அவர்களின் சிலை இன்று கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் கியூபா தூதுவருடன் இணைந்து அமைச்சர் விஜித்த ஹேரத் இந்த நினைவுச் சிலையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கொழும்பு துணை மேயர், கியூபா தூதுவர் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
இந்த நினைவுச் சிலை, புகழ்பெற்ற கியூபா சிற்பக் கலைஞர் ஆண்ட்ரெஸ் கொன்சாலஸ் கொன்சாலஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டதாகும். அதன் மொத்த கட்டிடக்கலை மற்றும் அமைப்புத் திட்டத்தை கட்டிடக் கலைஞர் கேஷான் டி சில்வா மேற்கொண்டுள்ளார்.
சிலையை திறந்து வைத்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னலமின்றி போராடிய ஜோசே மார்ட்டியின் உயர்ந்த சிந்தனைகளும் மனிதநேயப் பார்வையும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமாக உள்ளன என்றார்.
இலங்கைக்கான கியூபா குடியரசின் தூதுவர் மேதகு பட்ரிசியா லாசாரோ பேகோ குவேரா, இலங்கை–கியூபா நட்புறவு சங்கத்தின் இணைத் தலைவர்களான விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் டாக்டர் திலங்க சுமதிபால, மேலும் கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கலீ பல்தசார் ஆகியோர் ஜோசே மார்ட்டியின் வரலாற்றுப் பங்களிப்பை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
1853 ஜனவரி 28 அன்று பிறந்த ஜோசே மார்ட்டி, கியூபாவின் விடுதலைக்கும், லத்தீன் அமெரிக்க மக்களின் சுதந்திரத்திற்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர் ஆவார்.
மே 19 அன்று அனுசரிக்கப்படும் அவரது நினைவு நாள், சுதந்திரம், நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக அவர் செய்த தியாகத்தை நினைவுகூரும் முக்கிய நாளாகும்.














