யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, உணவகத்தில் இருந்து கழிவுநீரை வெளியில் விட்டு துர்நாற்றம் ஏற்படுத்தியமை, கடைக்குள் பூனை வளர்த்தமை, அழுகிய முட்டை இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்தமை மற்றும் திறந்த வெளியில் சமைத்தமை போன்ற சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக உணவாக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இருந்தார்.
அதன் பிரகாரம் நேற்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உணவக உரிமையாளர் மன்றில் முன்னிலையாகி தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார்.
அதனை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , இனம் காணப்பட்ட சுகாதர சீர்கேடுகளை நிவர்த்தி, செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு சுகாதார பரிசோதகருக்கு மன்று பணித்துள்ளது.
இதேவேளை, சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது.
அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக , பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் , அம்மாச்சியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை , ஏற்கனவே இனம் காணப்பட்ட சுகாதார பிரச்சனைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை மீறி உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தமையால் , குறித்த பிரச்சனைகளை சீர் செய்யும் வரையில் உணவகத்தை மூட பணித்துள்ளார்.
அதேவேளை அம்மாச்சி உணவக உணவு கையாள்வோருக்கான விழிப்பணர்வு செயற்பாட்டையும் முன்னெடுத்திருந்தார்.













