காசாவிற்கு உதவிப்பொருட்கள் எடுத்துச் சென்ற சமூக ஆர்வலர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் கொ*லைவெறித் தாக்குதல் நடத்திய காணொளி, தற்போது வெளியாகியுள்ள நிலையில் பல சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.
பெண் சமூக ஆர்வலரின் கழுத்தைப் பிடித்து நெரித்து, பாதுகாப்புப் படையினர் அவரைத் தரையில் தள்ளி கொடூரமாக தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
காசாவிற்குள் உதவிப்பொருட்கள் செல்லாத வகையில் எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.
எனினும் தடையை எதிர்த்து ‘சுமூத் புளோட்டிலா’ என்ற உதவிக்கப்பல் காசாவுக்கு உதவிப்பொருட்களை எடுத்து வந்த நிலையில் அந்த கப்பல் குழுவினர் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் உச்சக்கட்டமாக இந்த தாக்குதலை ஊக்குவித்து, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்வீர், அந்த காட்சிகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொடியியுடன் அந்த தாக்குதலை அமைச்சர் வரவேற்றுள்ளார்.
அமைச்சர் பென் க்வீர் பகிர்ந்துள்ள காணொளியில் கைது செய்யப்பட்ட சர்வதேச மனிதநேய ஆர்வலர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டு, தலையைத் தரையில் முட்டியபடி முழங்காலிட்டு அமர வைக்கப்பட்டுள்ளமையும் பதிவாகியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்த்து கருத்து தெரிவித்த பெண் ஆர்வலரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். அவர்களில் பலர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இந்த காணொளி வெளியானதை தொடர்ந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள இஸ்ரேலியத் தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளன.















