போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அபராதம் விதிக்கப்படுவதாக கூறி, வாகன சாரதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மோசடி நடைபெறும் விதம் குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்:
+639692161720 என்ற வெளிநாட்டு இலக்கத்திலிருந்து SMS அல்லது WhatsApp மூலம் உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.
அதில், நீங்கள் செய்ததாகக் கூறப்படும் போக்குவரத்து விதிமீறல் CCTV மூலம் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படும்.
அபராதத் தொகையை செலுத்துவதற்காக https://thecourierguy.eu.cc/lk என்ற இணையதள இணைப்பும் (Link) வழங்கப்படும்.
இந்த இணையதளம் அரசின் அதிகாரப்பூர்வ “Gov Pay” இணையதளத்தைப் போலவே மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் உங்கள் வாகன இலக்கத்தை உள்ளிட்டவுடன், நீங்கள் செய்ததாகக் கூறப்படும் போலியான போக்குவரத்து குற்ற அறிக்கையும் காட்டப்படும்.
அபராதத் தொகையை செலுத்த அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது, உங்கள் வங்கி அட்டை (Credit/Debit Card) தகவல்களை உள்ளிடுமாறு கேட்கப்படும்.
இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலுள்ள பணத்தை திருடுவதே இந்த மோசடியின் முக்கிய நோக்கமாகும்.
- தெரியாத இணைப்புகளை (Links) திறக்க வேண்டாம்:
SMS அல்லது WhatsApp மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை எந்த நிலையிலும் திறந்து, உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி தகவல்களை வழங்க வேண்டாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்:
அரசாங்க கட்டண சேவைகளுக்காக எப்போதும் .gov.lk கொண்ட அதிகாரப்பூர்வ அரச இணையதளங்களையே பயன்படுத்தவும்.
- வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்:
இலங்கையில் போக்குவரத்து அபராதங்கள் அல்லது அறிவிப்புகள் ஒருபோதும் வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்கள் (உதா: +63…) மூலம் அனுப்பப்படமாட்டாது.
உங்கள் வங்கி அட்டையின் இரகசிய எண் (PIN), OTP குறியீடு அல்லது அட்டையின் பின்னால் உள்ள CVV எண்ணை எந்த வெளிப்புற நபரிடமும் பகிர வேண்டாம் – என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.













