பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாக பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் (Email) வலையமைப்பு தொடர்பாக பொலிஸார் பொதுமக்களை விழிப்புணர்வூட்டியுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாக பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் (Email) வலையமைப்பு தொடர்பாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சைபர் பாதுகாப்பு மற்றும் திறந்த மூல விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை பொலிஸின் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பெயரையும், பொலிஸ்மா அதிபரின் பெயர் மற்றும் போலி கையொப்பத்தையும் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மிரட்டல் மற்றும் பணம் கேட்கும் மின்னஞ்சல் (Email) வலையமைப்பு குறித்து இதன் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் செயல்பாடுகள் மூலம் இலங்கை பொலிசின் நற்பெயருக்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனக் கவனிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான, அச்சுறுத்தும் அல்லது அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் (Email) தொடர்பாக, தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாக வேண்டாமெனவும்,
அச் செய்திகளுக்கு பதிலளிப்பதிலிருந்தும் அல்லது அவர்கள் கோரும் பணத்தை செலுத்துவதிலிருந்தும் தவிர்க்குமாறும்,
அந்த மின்னஞ்சல்களிலுள்ள இணைப்புகளை (Links) திறக்காமல் இருக்குமாறும்,
இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, இலங்கை பொலிஸ் கணினி குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவிற்கோ அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கோ அறிவிக்குமாறும் இலங்கை பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இம் மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை பொலிசார் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.













