புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் சமீரகம பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்திலிருந்து கரம்பை வீதி வழியாகக் கொத்தாந்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புத்தளம் டிப்போவிற்குச் சொந்தமான பேருந்தும், பெருக்குவட்டானிலிருந்து மதுரங்குளி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் சமீரகம பகுதியில் வைத்து எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் கொத்தாந்தீவு, பெருக்குவட்டான் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, உயிரிழந்தவரின் உடலத்தைப் பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் சாரதி மதுரங்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.














