தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் எனும் நிபந்தனையும் விதித்துள்ளது.
வெசாக் தினத்தினை முன்னிட்டு, தையிட்டி விகாரையில் நேற்றைய தினம்(30) வழிபாடு நடைபெற்ற நிலையில் , விகாரைக்கு சற்று தொலைவில் , காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் , விகாரைக்கு செல்வதாக கூறி விகாரை பகுதிக்கு சென்று , அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அதனை அவதானித்த பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து , இருவரையும் கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளுக்கு பின்னர் இருவரையும் மல்லாகம் பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் முற்படுத்திய நிலையில், அவர்களை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் மன்று விதித்துள்ளது.













