சர்வதேச அளவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளன.
காசா துறைமுகத்தில் உள்ள மக்கள் நெரிசல்மிக்க சிற்றுண்டிச்சாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், லெபனானின் தெற்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் பலம் வாய்ந்த மூலோபாய மலைப்பகுதியை இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த அக்டோபர் மாதம் எட்டப்பட்ட “போர்நிறுத்த” ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசா துறைமுகப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான சிற்றுண்டிச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
பொது விடுமுறை தினத்தை முன்னிட்டு, கடுமையான கோடை வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காகப் பொதுமக்கள் பலர் அங்கே குழுமியிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் குறைந்தது இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்ட போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் லெபனான் மீதான தனது தரைவழி ஆக்கிரமிப்பையும் வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அமைதி உடன்படிக்கையிலும் லெபனான் போர்நிறுத்தத்திற்கான உத்தரவாதம் சேர்க்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
லெபனானுக்குள் தனது இராணுவத்தை இன்னும் ஆழமாக முன்னோக்கி நகர்த்துமாறு இஸ்ரேலிய பிரதமர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, லெபனான் எல்லையில் இஸ்ரேல் பெரும் முன்னேற்றமடைந்துள்ளது.
தெற்கு லெபனானில் இடைக்காலக் கோட்டை ஒன்று அமைந்துள்ள மிக முக்கியமான மூலோபாய மலைக்குன்றை இஸ்ரேலிய இராணுவம் தற்போது கைப்பற்றியுள்ளது.
இந்த உயரமான மலைக்குன்றிலிருந்து பார்த்தால் தெற்கு லெபனான் எல்லை முழுவதும் தெளிவாகத் தெரிவதுடன், ஹிஸ்புல்லா அமைப்பின் பலம் வாய்ந்த தளமாகக் கருதப்படும் தெற்கு நகரமான நபடியே (Nabatieh) பகுதி வரை கண்காணிக்கும் சாதகமான சூழ்நிலை இஸ்ரேலுக்குக் கிடைத்துள்ளது.
தெற்கு லெபனானை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியப் படைகள் மற்றும் வடக்கு இஸ்ரேல் எல்லைக்குள் இருக்கும் இராணுவ முகாம்களைக் குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் (Armed Drones) மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதில் இஸ்ரேலியப் படையினருக்குப் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், இஸ்ரேல் அரசு தன் நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
இதற்குப் பதிலடியாகவே, லெபனானுக்குள் ஊடுருவி நிலப்பரப்புகளைக் கைப்பற்ற இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராணுவத் தலைமை முயற்சித்து வருகிறது.
சமீபத்திய நாட்களில் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் உள்நாட்டுப் பகுதிகளைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் மட்டும் இஸ்ரேலிய இராணுவத்தின் ஊடுருவலை முழுமையாகத் தடுத்து நிறுத்திவிட முடியாது என இராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இத்தாக்குதல்கள் மூலம் இஸ்ரேலிய இராணுவத்திற்குப் பெரும் பொருளாதார மற்றும் உயிர்ச் சேதங்களை ஹிஸ்புல்லா ஏற்படுத்தி வருகிறது.
தங்களை ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வைப்பதற்காக இஸ்ரேல் கொடுக்கும் அழுத்தங்களுக்குப் பணிய ஹிஸ்புல்லா தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















