அகமதாபாத்தில் நேற்றிரவு (மே 1) நடந்த 2026 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 05 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது சம்பியன் ஆனது.
இந்த வெற்றியானது ஐ.பி.எல். தொடரில் RCB அணிக்கு இரண்டாவது சம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
அத்துடன் 2026 ஐ.பி.எல். கிண்ணத்துடன் சேர்த்து, RCB அணிக்கு 20 கோடி இந்திய ரூபா பரிசுத் தொகை கிடைத்தது.
இதற்கிடையில், இரண்டாம் இடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 13 கோடி இந்திய ரூபா வழங்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 2026 ஆம் ஆண்டுக்கான போட்டித்தொடருக்கா 46.5 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), அறிவித்துள்ளது.
இதில், அணிகள் தங்களின் இறுதி நிலைகளின் அடிப்படையில் பரிசுகளைப் பெறும்.
இந்த சீசனில் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளும், தங்களது சிறப்பான செயல்பாட்டிற்காகப் பரிசுத் தொகையைப் பெற்ற அணிகளில் அடங்கும்.
2026 ஐ.பி.எல். பரிசுத் தொகை
2026 ஐ.பி.எல். பட்டத்தை வென்றதற்காக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ₹20 கோடி கிடைத்தது.
இதற்கிடையில், இறுதிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ₹13 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்காக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ₹7 கோடியும், சீசனை நான்காவது இடத்தில் முடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ₹6.5 கோடியும் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை, போட்டித் தரவரிசையில் அவர்கள் பெற்ற இடத்தைப் பொறுத்து அமைந்தது.
இது தவிர தொடரில் அதிக ஓட்டங்களை (776) குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்திய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
அதேநேரம் தொடரில் அதிகளவில் விக்கெட்டுகளை வீழ்த்திய (29 விக்கெட்டுகள்) குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவுக்கும் 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
மேலும், சீசனின் சிறந்த ஸ்டிரைக் ரேட், மிகவும் மதிப்புமிக்க வீரர், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள், அதிக டொட் பந்துகள், சிறந்த பிடியெடுப்பாளர், ஃபேர்பிளே விருது, சிறந்த பிட்ச் மற்றும் மைதானம் போன்றவற்றுக்கும் தனித்தனியான பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
ஐ.பி.எல். தொடர் பரிசுத்தொகையின் வளர்ச்சி
2008-ல் இந்தத் தொடர் தொடங்கப்பட்டபோது, வெற்றியாளருக்கான பரிசுத்தொகை மிகவும் வித்தியாசமாக இருந்தது.
தொடக்க ஆண்டுகளில் சம்பியன்களுக்கு ₹4.8 கோடி வழங்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் கிண்ணத்தை வென்ற அணிக்கு ₹20 கோடி வழங்கப்படுகிறது.
ஊடக உரிமைகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் வணிகக் கூட்டாண்மைகள் மூலம் அதிகரித்து வரும் வருமானம், பல ஆண்டுகளாக ஒட்டுமொத்தப் பரிசுத் தொகையை உயர்த்த உதவியுள்ளது.
ஐந்தாவது முதல் பத்தாவது இடம் வரை பெறும் அணிகள் லீக்கிலிருந்து அதிகாரப்பூர்வ பரிசுப் பணத்தைப் பெறுவதில்லை.
இருப்பினும், உரிமையாளர்கள் விளம்பர ஒப்பந்தங்கள், விற்பனைப் பொருட்கள் விற்பனை, டிக்கெட் வருவாய் மற்றும் ஒளிபரப்பு வருமானம் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
லீக் விதிகள் பொதுவாக பரிசுப் பணத்தை உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றன.
இதன் மூலம் ஒரு வெற்றிகரமான சீசனில் ஈடுபட்டவர்கள் பரிசுத் தொகையில் ஒரு பங்கைப் பெறுவதை உறுதி செய்கின்றன.
இந்தப் போட்டித்தொடர் தனிப்பட்ட வீரர்களுக்கும் வெகுமதி அளிக்கிறது.
ஆரஞ்சு தொப்பி, பேர்ப்பிள் தொப்பி மற்றும் மிகவும் மதிப்புமிக்க வீரர் போன்ற விருதுகளுடன், மொத்தமாக சுமார் ₹1 கோடி மதிப்புள்ள தனித்தனி ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
















