இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் ‘அரசு நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள ‘உள்ளக விவகாரப் பிரிவுகளின்’ செயற்பாடுகள் மற்றும் 2025-29 ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைய, இலங்கை சுங்கம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிறுவனங்களில் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், நேர்மையான கலாச்சாரம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்கும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், இந்நிறுவனங்களில் தொடர்ந்தும் நேர்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எஸ். கே. லியனகம, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ஆர். பி. எச். பெர்னாண்டோ, மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. என். ஏ. பேமரத்ன உட்பட அந்தந்த நிறுவனங்களின் உள்ளக விவகாரப் பிரிவுகளின் பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












