ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலிருந்து வௌியேற உத்தரவிடப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வௌியே உள்ள வேறு ஏதேனும் ஒரு ‘மூன்றாம் நாட்டில்’ அமைக்கப்படும் சிறப்பு மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான புதிய விதிமுறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அதன் சட்டமியற்றுபவர்களும் முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளனர்.
வலதுசாரி அரசியல் கட்சிகளின் தொடர் அழுத்தங்கள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளை மிகக் கடுமையானதாக மாற்றும் ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி முடிவு எட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐரோப்பிய ஆணையத்தால் (European Commission) முன்மொழியப்பட்ட இந்த புதிய மசோதாவிற்கு, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முறையான இறுதி ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது.
புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்களை, தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளில் அமைக்கப்படும் தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்ப உறுப்பு நாடுகளுக்கு இச்சட்டம் அனுமதியளிக்கும்.
குடியேறிகளின் தடுப்புக்காவல் காலத்தை நீட்டிக்கவும், சட்டத்திற்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய தடை, அபராதங்கள் மற்றும் குற்றவியல் தண்டனைகளை விதிக்கவும் இது வழிவகை செய்கிறது.
புலம்பெயர்ந்தோரின் தனிப்பட்ட உடைமைகளைப் பறிமுதல் செய்யவும், சிறார்களைத் தடுத்து வைக்கவும், பயோமெட்ரிக் (Biometric) தரவுகளைச் சேகரிக்கவும் மற்றும் வீடுகளுக்குள் நுழைந்து அதிரடிச் சோதனைகளை நடத்தவும் அதிகாரிகளுக்கு இந்தச் சட்டம் அனுமதி வழங்குகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு சட்டவிரோதக் குடியேறிகளின் வருகையானது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26% வரை குறைந்துள்ளது.
இது கடந்த 2021-ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டவர்களில் சுமார் 20 சதவீதத்தினர் மட்டுமே தற்போது நாடு கடத்தப்படுவதாக ஐரோப்பிய ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
யார் நாட்டிற்குள் நுழையலாம், யார் தங்கலாம் மற்றும் யார் வெளியேற வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முழுமையான கட்டுப்பாட்டை இந்த புதிய விதிகள் வழங்கும் என ஐரோப்பிய ஆணையர் மேக்னஸ் புரூனர் (Magnus Brunner) தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய குடியேறிகளை அனுப்ப எந்தெந்த வெளிநாடுகள் சம்மதித்துள்ளன என்ற விபரத்தை உறுப்பு நாடுகள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
இருப்பினும், கூட்டு நாடுகடத்தல் மற்றும் குடிவரவு மையங்களை அமைப்பதற்காக நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, கிரீஸ் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் ஏற்கனவே இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக ஆப்பிரிக்க நாடான உகாண்டாவுடன் நடத்தப்பட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் அதே வேளையில், மக்களை நாடு கடத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கு இது அரசாங்கங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என ஐரோப்பிய ஆணையம் கூறினாலும், மனித உரிமை அமைப்புகள் இக்கூற்றை முற்றாக நிராகரித்துள்ளன.















