2009க்கு பின் யாழ்ப்பாணம் பண்டத்தரப்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தியான இல்லத்தில் ஒரு பெரிய கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.திருச்சபையின் ஆயர்கள்,மதகுருக்கள்,இவர்களோடு பெருமளவுக்கு இளையோரும் கலந்து கொண்ட அந்த கருத்தரங்கில், ஒருநாள் நானும் உரையாற்றினேன். எனது உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. எனது உரைக்கு அங்கே வந்திருந்த ஒரு மூத்த ஆயர் எதிர்ப்பு தெரிவித்தார்.வயதால் மூத்த அவர் இரத்தினபுரி மறை மாவட்டத்தின் ஆயர் என்று சொன்னதாக ஒரு ஞாபகம். அவர் பின்வரும் பொருள்பட பதில் சொன்னார்….”இலங்கையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினால் அரசாங்கம் அதை நசுக்கும்.அது சிங்கள இளையோர் ஆக இருந்தாலும் சரி, தமிழ் இளையோராக இருந்தாலும் சரி, ஒரு அரசாங்கமாக அதை அவர்கள் நசுக்குவார்கள். இதுதான் ஜெவிபிக்கும் நடந்தது. இதுதான் தமிழ் புலிகளுக்கும் நடந்தது. இதில் இன முரண்பாடு இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினால் அதனை அரசாங்கம் நசுக்கும். அதுதான் 2009 நடந்தது…”
அப்பொழுது நான் திரும்பக் கேட்டேன், “அப்படியென்றால் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் ஆயுதப் போராட்டத்தை மனிதாபிமானமற்ற குரூரமான வழிகளில் ஓர் அரசாங்கம் நசுக்குவதை கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்கிறதா ?”என்று. அதற்கு அவர் பதில் சொல்லவில்லை.ஆனால் அங்கே வந்திருந்த மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மதகுரு சொன்னார்,என்னுடைய பேச்சை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் போது அதில் தவறு இருந்தது என்று. அந்த மொழிபெயர்ப்பு தவறினால் ஆயர் அதனைப் பிழையாக விளங்கிக் கொண்டார் என்று.அந்த தவறான மொழிபெயர்ப்புக்குத்தான் அவர் பதில் சொன்னார் என்று.
இருக்கலாம்.ஆனால் அன்றைக்கு அந்த மூத்த ஆயர் என்ன சொன்னாரோ அதைத்தான் அண்மையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் அலுவலகத்தைச் சேர்ந்த உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராகிய அருட்தந்தை ஜூட் நிஷாந்த கூறியிருக்கிறார்.
திருச்சபையின் இரத்தினபுரி மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜீவந்த பீஸ் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராகவே மேற்படி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் சில ஆண்டுகளுக்கு முன் கொழும்பு காலி முகத்திடலில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களில் முன்னணியில் காணப்பட்ட ஒரு மதகுரு.அதனாலேயே அவமதிப்புகளுக்கு அச்சுறுத்தல்களுக்கு துன்புறுத்தல்களுக்கு ஆளாகியவர்.
அவர் கடந்த 16ஆம் தேதி, 17 ஆவது மே 18ஐ நினைவு கூர்ந்து, கொழும்பில் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் ஆற்றிய உரைதான் இப்பொழுது இலங்கை தீவின் மத வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடுமையான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.அந்த கருத்தரங்கு “சம உரிமை இயக்கத்தால்” ஒழுங்கு செய்யப்பட்டது. “முள்ளி வாய்க்காலோடு வரலாறு முடிந்து விட்டதா?” என்ற தலைப்பிலான அந்த கருத்தரங்கில், அருட்தந்தை ஜீவந்த உரையாற்றினார்.தனது உரையின் ஒரு பகுதியில் அவர்..”தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்தது ஓர் இனப்படுகொலை எனவும்,சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்”…என்றும் கூறியிருந்தார்.
அவருடைய அந்தக் கருத்துக்கு கொழும்பு பேராயர் இல்லத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளராகிய ஜூட் நிஷாந்த, அதற்கென்று ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு விசேஷ ஊடகச் சந்திப்பில் பின்வருமாறு பதில் அளித்திருந்தார்.”எமது யுத்த வெற்றியை உத்தியோகபூர்வமாகக் கொண்டாடும் நாளில், கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஓர் அறிக்கையை விடுக்கிறார்; அதாவது, 2009 இல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த காலப்பகுதியில் அந்த யுத்தமானது, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் அல்ல, அது தமிழ் மக்களை இந்த நாட்டில் இருந்து வேரறுப்பதற்காக நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலை என அவர் கூறுகிறார். இந்த அறிக்கையைக் கேட்டு பலர் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். எனவே, விசேடமாக கூற வேண்டியது என்னவென்றால், அவர் விடுத்த அறிக்கை ஒட்டுமொத்த கத்தோலிக்க திருச்சபையின் அறிக்கை அல்ல. அது இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் மன்றத்தின் கருத்தும் அல்ல.கத்தோலிக்க மக்கள் என்ற ரீதியில் நாம் ஒருபோதும் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதில்லை. அதேபோல், இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதையோ அல்லது இவ்வாறான கருத்துக்களைத் தங்களின் மனதில் வைத்திருப்பதையும் நாம் கடுமையாக நிராகரிக்கிறோம்.”
அருட்தந்தை ஜூட் நிஷாந்த தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மறை மாவட்டங்களைச் சேர்ந்த மத குருக்கள் மத்தியில் கடுமையான எதிர்வினைகளைப் பெற்றிருக்கின்றன.யாழ்.மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மத குருக்கள் இணைந்து ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தினார்கள். அதன் பின் அந்த மத குருக்களில் ஒருவர் குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து வேறொரு ஊடக சந்திப்பை நடத்தினார். இந்த இரண்டு ஊடக சந்திப்புகளிலும் தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்புதான் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.அது தொடர்பாக கொழும்பு பேராயர் இல்லத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க தமிழ் மறை மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கைகளிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் இன அழிப்பு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் அருட்தந்தை ஜீவந்த தெரிவித்த கருத்துக்களை ஆதரித்து அவருடன் தமது உணர்வு ஒருமைப்பாட்டை தெரிவித்திருக்கும் தமிழ் குருவானவர்கள்,தமிழ் மக்கள் தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் தொகுத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இது இலங்கைத் தீவின் மூன்றாவது பெரிய மதப்பிரிவும்,உள்ளவற்றில் ஆகப்பெரிய கிறிஸ்தவ மதப் பிரிவும் ஆகிய கத்தோலிக்க திருச்சபைக்குள் இன முரண்பாடுகள் ஆழமாக வேரோயிருப்பதை உணர்த்துகின்றது. இலங்கை தீவுக்குள் முதலில் வந்த திருச்சபை கத்தோலிக்க திருச்சபைதான்.அப்படிப் பார்த்தால் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் பின்பற்றப்படும் மூத்த திருச்சபை அது.தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தில் தமது மக்களின் இன உணர்வுகளை தமிழ் கத்தோலிக்க திருச்சபை பெருமளவுக்குப் பிரதிபலித்தது.
தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தில் முதலாம் கட்ட ஈழப் போரில் தொடங்கி இறுதிக்கட்ட இழப்போர் வரையிலும் திருச்சபை தியாகிகளின் பட்டியல் ஒன்று உண்டு.முதலாம் கட்ட ஈழப் போரில்,யாழ்ப்பாணம் நாவலர் வீதியில், காயப்பட்ட இயக்க உறுப்பினர் ஒருவரை மறைத்து வைத்திருந்த ஒரு வீடு சுற்றி வளர்க்கப்பட்டது.அந்த வீட்டில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.தொடர்ச்சியாக கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை சிங்கராயர் கைது செய்யப்பட்டார்.சிறையில் இருந்தார்.அவரோடு சேர்ந்து ஒரு புராட்டஸ்தாந்து மதத்தவரான ஜெயகுலராஜாவும் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்க புராட்டஸ்டாந்து மதப் பிரிவை சேர்ந்தவர்கள் குறிப்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக இருந்தவர்கள், கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் அது.தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தில் படித்த ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பதனை அந்த சம்பவம் வெளி உலகுக்குக் காட்டியது.
இதிலிருந்து தொடங்கி கத்தோலிக்க திருச்சபையின் மதகுருக்கள் நான்கு கட்ட ஈழப் போர்களின் போதும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்;சிறையில் இருந்திருக்கிறார்கள்;காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்; ;கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இறுதிக் கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையினருக்கு வழிகாட்டியாக சென்ற ஒரு கத்தோலிக்க மதகுரு சரணடைந்த விடுதலைப் புலிகளோடு சேர்த்து காணாமல் போய்விட்டார்.அவர் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்.யாழ்ப்பாணம்,புனித சம்பத்திரிசியார் கல்லூரியின் அதிபராக இருந்தவர்.இயக்கத்தின் கல்விக் கழகத்தில் பொறுப்பில் இருந்தவர்.இறுதிக்கட்டப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுரு ஆவர்.
எனவே முதலாவது கட்ட ஈழப்போரில் தொடங்கி இறுதிக்கட்ட ஈழப் போர் வரையிலும் கத்தோலிக்கத் திருச்சபையின் தமிழ் மத குருக்கள் போராடும் தமது மக்களோடுதான் நின்றிருக்கிறார்கள்.அதனால் காயப்பட்டிருக்கிறார்கள்; கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் ;சித்திரவதைப்பட்டிருக்கிறார்கள்; காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்; கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு இலங்கைத் தீவின் இன முரண்பாட்டை மிக ஆழமாக பிரதிபலித்த ஒரு திருச்சபைக்குள் 2009க்குப் பின்னரும் அந்த முரண்பாடுகள் எந்த அளவுக்கு ஆழமாக உள்ளன என்பதனை அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்த கருத்துக்களின் மீதான வாதப்பிரதிவாதங்கள் நமக்கு உணர்த்துகின்றன.அரசாங்கம் இன முரண்பாடுகள் இல்லை;இனவாதம் இல்லை என்று கூறிக்கொள்கிறது.ஆனால் நாட்டின் மிகப் பெரிய திருச் சபையோ இன முரண்பாட்டை மிக ஆழமாகப் பிரதிபலிக்கிறது.
அதேசமயம் அருட்தந்தை ஜீவந்த பிரிஸின் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு ஒரு பேருண்மையை உணர்த்துவன.சிங்கள சமூகம் எனப்படுவது தட்டையானது அல்ல. அங்கே பல பிரிவுகள்;பல நம்பிக்கைகள்;பல அடுக்குகள் உண்டு.இன முரண்பாடு தொடர்பிலும் குறிப்பாக தமிழ் மக்கள் கேட்கின்ற இன அழிப்புக்கு எதிரான நீதி தொடர்பிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்களுக்கு சார்பாக குரல் கொடுக்கக்கூடிய நீதிமான்கள் உண்டு என்ற முன்னுதாரணத்தை அருட்தந்தை ஜீவந்த பீரீஸ் மீண்
















