இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரும் கடல்வாழ் உயிரினங்கள், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய வர்த்தக ஒழுங்கு விதிகளின் கீழ், பொருட்களை ஏற்றுமதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தளர்வானது இந்தியாவின் விவசாய மற்றும் கடல்சார் வர்த்தகத் துறையில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.59 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீன் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலையில், இந்த புதிய அனுமதி மீன்பிடித் துறைக்கு பெரும் சாதகமாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
















