பிரித்தானியாவின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்கும், இராணுவத்தை மறுசீரமைப்பதற்கும் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள், நிதி அமைச்சகத்திற்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையிலான மோதலால் பெரும் இழுபறியை சந்தித்துள்ளன.
அதிகரித்து வரும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பிரித்தானிய அரசின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம்’ மேலும் காலதாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், நாட்டின் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.
பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது தனது அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமை என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் தொடர்ந்து கூறி வந்த போதிலும், அதற்கான முறையான திட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திறைசேரி வழங்க முன்வந்துள்ள கூடுதல் நிதி, பாதுகாப்பு அமைச்சகம் கோரிய தொகையை விட மிகவும் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக இத்திட்டம் வெளியாவது மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இழுபறி நிலை காரணமாக, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆயுத உற்பத்தித் தொழில்துறைகள் அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.













