அதிக அளவு எத்தனோல் கலக்கப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியை இந்தியா நீக்கியுள்ளது.
இது, மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நாடு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வரிவிதிப்பு மூலம் ஊக்கமளிக்கிறது.
இது தொடர்பில் புதன்கிழமை (10) வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பின்படி, 22% முதல் 30% வரை எத்தனோல் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரும் நுகர்வோருமான இந்தியா, தனது விரிவான எரிசக்தி பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக, எரிபொருள் கலவையில் எத்தனோல் பயன்பாட்டைத் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலால் வரி விலக்கு என்பதன் பொருள் என்ன?
கலால் வரி என்பது எரிபொருட்கள் உட்பட சில பொருட்களின் மீது இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்படும் ஒரு வரியாகும்.
அதிக எத்தனோல் உள்ளடக்கம் கொண்ட பெட்ரோலுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம், அரசாங்கம் அத்தகைய எரிபொருள் கலவைகளை உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்குப் பொருளாதார ரீதியாக மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
இந்த அறிவிப்பு, 22% முதல் 30% வரை எத்தனோல் அளவு கொண்ட பெட்ரோலுக்குப் பொருந்தும்.
சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் வழக்கமான பெட்ரோலுக்கு அரசாங்கம் உடனடியாக எந்த மாற்றங்களையும் அறிவிக்கவில்லை,
ஆனால் இந்த நடவடிக்கை அதிக எத்தனால் கலந்த எரிபொருட்களின் வளர்ச்சி மற்றும் விநியோகத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஏன் எத்தனோல் கலந்த பெட்ரோலை ஊக்குவிக்கிறது?
இந்தியா தனது எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயை பெருமளவில் சார்ந்துள்ளது.
கரும்பு மற்றும் தானியங்கள் போன்ற விவசாய மூலப்பொருட்களிலிருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எத்தனோல் பயன்பாட்டை அதிகரிப்பது, இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உலகளாவிய எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் நாட்டில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
எத்தனோல் கலப்புத் திட்டம், விவசாயிகளுக்கு ஒரு கூடுதல் சந்தையை உருவாக்கியதோடு, எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரந்த இலக்கிற்கும் ஆதரவளித்துள்ளது.
இந்தியா தனது எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், தூய்மையான எரிபொருட்களை ஊக்குவிக்கவும் முயல்வதால், கடந்த பத்தாண்டுகளில் பெட்ரோலில் எத்தனோல் கலப்பதை வேகமாக அதிகரித்துள்ளது.
அண்மைய வரிச் சலுகையானது, அதிக அளவு எத்தனோல் கலந்த பெட்ரோலின் பயன்பாட்டை இந்தியா ஊக்குவிக்க விரும்புவதைக் குறிக்கிறது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் தேவையுடன், அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைச் சமநிலைப்படுத்த நாடு முயற்சிக்கும் இக்காலகட்டத்தில், மாற்று எரிபொருட்கள் மீது அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதையும் இது பிரதிபலிக்கிறது.
நுகர்வோருக்கு, இதன் உடனடித் தாக்கம் குறைவாக இருக்கலாம். இருப்பினும், தனது போக்குவரத்து எரிபொருள் கலவையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனோலின் பங்கை அதிகரிப்பதற்கான இந்தியாவின் நீண்டகாலத் திட்டத்தில் இந்த நடவடிக்கை மற்றொரு படியைக் குறிக்கிறது.
















